Sunday 14 July 2013

பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வியை மேம்படுத்த, அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிகளுக்கு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டன.
இதனால், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து பெறப்படும் தகவல்கள், உத்தரவுகள், உடனடியாக சி.இ.ஓ.,வின் வலைதளம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன. இதை, "எல்காட்" நிறுவனம் பராமரித்து வந்தது. கணினிகள் வழங்கி, 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால், பெரும்பாலான பள்ளிகளில், யூ.பி.எஸ்., பழுதாகி, கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன.
இதனால், மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி கற்பதில், சிக்கல் ஏற்பட்டது. மேலும், இணையதளத்திற்கான தொலைபேசி கட்டணத்தை, எல்காட் நிறுவனம் செலுத்தாததால், மூன்று மாதங்களுக்கு மேலாக அரசு பள்ளிகளில், இன்டர்நெட் வசதிகளும் முடக்கின. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், கடந்த, 1ம் தேதி செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குனர், சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசு பள்ளிகளில் உள்ள கணினிகளின் எண்ணிக்கை, அதில், இயக்கத்தில் உள்ளவை எத்தனை, பிரின்டர், யூ.பி.எஸ்., பழுதான விவரங்கள், எந்தெந்த பள்ளிகளுக்கு, கணினி தேவை.
பிராட்பேண்ட் இணைப்பு உள்ளதா, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டதா, மாதாந்திர, ஆண்டு கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நகல், சி.இ.ஓ., அலுவலகம் மூலம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment